சென்னை: நள்ளிரவு வேளையில் சுற்றுக்காவல் பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை தலைமைக் காவலர் மீது சிலர் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. அந்நபர்கள் காவலரைத் தாக்கும் காட்சி அப்பகுதில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் அண்மைக்காலமாக சங்கிலிப் பறிப்பு, வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து இப்பகுதிகளில் சுற்றுக்காவல், வாகனச் சோதனைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி காவல் நிலை யத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் அன்பழகன் அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மீது அவருக்கு சந்தேகம் எழுந்தது. ஒரே வாகனத்தில் வந்த அம்மூவரையும் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார் அன்பழகன். இதனால் ஆவேசம் அடைந்த மூவரும் திடீரென அவரை தாக்கத் தொடங்கினர். மூவரில் ஒருவர் தன்னிடம் இருந்த அரிவாளால் அன்பழகனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அன்பழகன் அலறினார்.
இதையடுத்து அவரைத் தாக்கிய மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் அன்பழகன் சக காவலர்களுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் காரில் விரைந்து சென்று மூவரையும் மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னர் நடந்த விசாரணையில் மூவரும் மது போதையில் அத்துமீறியது தெரியவந்தது. மேலும் அவர்கள் யார், எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். காவலர் அன்ப ழகன் தாக்கப்படும் காணொளி காட்சியை காவல்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் பல்வேறு விவாதங் களையும் கிளப்பி உள்ளது. மது போதை காரணமாக இளையர்கள் இது போன்ற வன் முறைச் செயல்களில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காவலர் தாக்கப்படும் காட்சி படம்: தமிழகத் தகவல் சாதனம்

