சென்னை: தமிழக மக்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் வெடிக் கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். நேற்று எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார். "உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு தந்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து காலம் கடத்தி வருகிறது.
இதற்கு ஜால்ரா அடிக்கும் அடிமை அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. "எனவே மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி உள்ளோம்," என்றார் மு.க.ஸ்டாலின். இதுவரை தமிழகத்தில் இப்படி ஒரு முழு அடைப்பு நடந்திராத வகையில் முழு அடைப்பு வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைதாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

