மும்பை: மும்பை அரசு மருத்துவ மனையில் சுயநினைவை இழந்த நிலையில் இருந்த பரமீந்தர் குப்தா, 27, என்பவரின் கண்ணை எலி கடித்துவிட்டதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார். சாலை விபத்தில் தலையில் அடிபட்டதால் சுயநினைவை இழந்த பரமீந்தர் குப்தா, தனியார் மருத்துவமனையில் மார்ச் மாதம் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். அதைத் தொடர்ந்து ரூ.6 லட்சம் கட்டுமாறு மருத்துவமனை நிர்வாகம் பரமீந்தரின் தந்தை ராம் குப்தாவை நிர்ப்பந்தித்தது. பிறகு பரமீந்தர், ஜோகேஸ்வரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பரமீந்தரை கடந்த 21ஆம் தேதி மருத்துவர்கள், ஆபத்து என்று தெரிந்தும் பொதுச் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றிவிட்டனர். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி பரமீந்தரின் கண்களை எலி கடித்துவிட்டதைப் பார்த்த அவரின் தந்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். மருத்துவமனை புகாரை மறுத்தது. என்றாலும் மாவட்ட நிர்வாகம் ராம் குப்தாவின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

