சென்னை: முன்னாள் மாவட்ட ஆட்சியர் தொடுத்த வழக்கு தொடர்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் முன்னி லையாக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணுச்சாமி என்பவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை நீண்ட காலம் நீடித்ததால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கண்ணுச் சாமி தமக்குப் பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து உயர் நீதி மன்றத்தை அணுகினார்.
அவரது மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம் பதவி உயர்வு அடிப் படையில் கண்ணுச்சாமிக்குக் கிடைத்திருக்க வேண்டிய பணப் பலன்களைக் கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் வழங்க வேண் டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார் கண்ணுச்சாமி. நீதிமன்ற உத்தரவைக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே தலைமைச் செயலரிடம் நேரில் ஒப்படைத்ததாகவும், அதன் பேரில் அவர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் கண்ணுச் சாமி தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் எதிர்வரும் 18ஆம் தேதி வரை வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும் அதற்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வில்லை எனில் தலைமைச் செயலர் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட் டுள்ளனர்.

