இந்துக்களின் புனித நூலாகக் கருதப் படும் பகவத் கீதையை முழுவதுமாகப் பட்டுத் துணியில் நெய்து வியப்பை அளித்துள்ளார் இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமபிரபா சூத்தியா எனும் 62 வயதுப் பெண்மணி. திப்ருகர் மாவட்டம், மோரன் நகரைச் சேர்ந்த திருவாட்டி ஹேமபிரபா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இந்த அரிய கலைப்படைப்பை உருவாக் கும் பணியைத் தொடங்கினார். 20 மாத கால கடும் உழைப்பிற்குப் பிறகு கடந்த ஞாயிறன்று அவரது அந்த அரும்பணி நிறைவு பெற்றது.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங் களுள் ஒன்றான மகாபாரதத்தில் கண்ணபிரான், பாண்டவர்களில் ஒரு வரான அர்ஜுனனுக்குப் போர்க்களத்தில் அளிக்கும் உபதேசமே பகவத் கீதை என வழங்கப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் மொத்தம் 700 பாடல்களைக் கொண்ட பகவத் கீதை முழுவதையும் திருவாட்டி ஹேமபிரபா பட்டுத் துணியில் கொண்டு வந்துள்ளார். இரண்டடி அகலம், 150 மீட்டர் நீளப் பட்டுத் துணியில் பகவத் கீதை முழுவது மாக நெய்யப்பட்டு இருக்கிறது. அதில், ஆங்கிலத்திலும் ஓர் அத்தியாயத்தை இடம்பெறச் செய்து அசத்தியிருக்கிறார் திருவாட்டி ஹேமபிரபா. "பகவத் கீதை நமது கலாசாரம், சமயத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகத் திகழ்வதால் அந்தப் புனித நூலைப் பட்டுத் துணியில் நெய்யவேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன்.

