நாகை: மணல் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சீர்காழியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அகோரம் என்பவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. அவரது உறவினர்கள் மீதும் வழக்குப் பதிவானதுடன் சிலர் கைதாகியுள்ளனர். முன்பு பாமகவில் இருந்த அகோரம், பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் விவசாயச் சங்கம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு அவர் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் இணைச்செயலர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பெரிய திடல் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்த அகோரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு ஆறுகள், குளங்களில் இருந்து சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மணலைக் கொண்டு வந்து அங்கு குவித்ததாகப் புகார் எழுந்தது. இவ்வாறு அனுமதியின்றி மணல்குவாரி நடத்துவதைப் போல் செயல்பட்டு வந்த அகோரம் குறித்து நாகை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்குப் புகார் சென்றது. அதன் பேரில் அகோரம் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. ஆறு பேர் கைதாகினர்.

