அயோத்தி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு; 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அயோத்தி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு; 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

1 mins read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து, புதிதாக அமைக்கப்படும் அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் அயோத்தி வழக்கை விசாரிக்கும் தகுதிவாய்ந்த புதிய அமர்வு குறித்து ஜனவரி 10ஆம் தேதி விசாரணை நடத்தி, அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். நேற்று ஒரு நிமிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.