தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருந்ததுபோல் அல்லாமல் இந்த முறை 24 விழுக்காடு குறைவாகப் பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கடும் குளிரும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலை பொங்கல் வரை நீடிக்கும் என தமிழ்நாடு வானிலை நிலையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருத்தணி, திருவள்ளூர், விரிஞ்சிபுரம், வேலூர், பையூர், தருமபுரி, அந்தியூர், ஈரோடு, கோவை, பேச்சிப்பாறை, திருமங்கலம், மதுரை, பவானி, பாண்டிச்சேரி, சூலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 16 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, ஓசூரில் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஊட்டியில் 7.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது.
மாலை 4 மணிக்கே குளிர் காற்று வீசத் தொடங்கி மறுநாள் நண்பகல் 12 மணி வரை தொடர்கிறது. இதனால் பொழுது சாய்ந்ததுமே மக்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடுங்குளிர் நிலவியது. அதுபோல் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வழக்கத்தைவிடக் குறைவான அளவிலேயே வெப்பநிலை காணப்பட்டது. சென்னையின் பூந்தமல்லியில் வெப்பநிலை 16.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வெப்பநிலையானது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

