சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என மீண்டும் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மோடி ஆட்சியில்தான் தமிழகத்தின் உரிமைகள் அதிகம் பறிக்கப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் காணொளி மூலம் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் மறைந்த பிரதமர் வாஜ்பாய் கலாசாரத்தைப் பின்பற்றி பழைய நண்பர்களை வரவேற்க பாஜக எப்போதும் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஸ்டாலின், பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டது வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
"இந்த நான்கரை ஆண்டுக் காலத்தில் இந்திய ஒருமைப்பாட்டினைப் பலப்படுத்தவோ, வலுப்படுத்தவோ எந்தவகையிலும் உதவாத வெறுப்புப் பேச்சுகளை விதைத்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் நண்பன் என்று கூறிக்கொண்டே சமூகநீதியைக் குழி தோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தமிழகத்தின் நலன்களை அடியோடு புறக்கணித்தது மத்திய அரசு," என்று மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்திற்கு உலைவைத்து, அரசியல் சட்டத்தின்கீழ் இயங்கும் அமைப்புகள் அனைத்தையும் தலைசாய வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், 'சரியான மனிதர் தவறான கட்சியில் இருக்கிறார்' என்று கருணாநிதியால் வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மோடி தம்மை ஒப்பிட்டுக்கொள்வது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது என விமர்சித்துள்ளார்.