ஜார்க்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த 132 பழங்குடியின ஜோடி களுக்கு நிமித்தா என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. 132 ஜோடி களில் 76 ஜோடிகள் இயற்கையை வழிபடுபவர்கள் என்று கூறப்படும் சர்னா இனத்தைச் சேர்ந்தவர்கள். 36 பேர் இந்துக்கள். 20 பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். திருமண ஜோடிகளின் வயது 24 முதல் 40 வரை ஆகும்.
இதுகுறித்து அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிகிதா சின்ஹா கூறுகையில், "பழங்குடியினருக்கும் சட்டப்படி திருமணம் நடத்திவைக்கிறது நிமித்தா தொண்டு நிறுவனம். மூன்றாவது ஆண்டாக இதுபோன்ற திருமண விழா நடத்தப்படுகிறது. 2017ஆம் ஆண்டு 21 பேருக்கும் 2018ல் 43 பேருக்கும் திருமணம் செய்து வைத்தோம். இந்த முறை 132 பழங்குடியின ஜோடிக்குத் திருமண விழாவை நடத்தியுள்ளோம். வறுமை அவர் களுடைய பெரிய பிரச்சினை. அதனால்தான் அவர்களது திருமண உறவுக்குச் சட்ட அங்கீகாரம் பெற அவர்களால் முடியாமல் இருக்கிறது. சம்பளமும் அவர்களுக்கு அதிகமில்லை. எனவே அவர்களால் அன்றாடத் தேவைக்கு மேல் வேறு எதற்கும் செலவிட முடிவதில்லை," என்று சின்ஹா குறிப்பிடுகிறார்.