ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைச் சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
"புல்வாமா நகரில் நடந்த கொடூரமான தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் காயங்களையும் பற்றி கேள்வியுற்ற எனக்கு இது குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று டாக்டர் பாலகிருஷ்ணன், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பிய அனுதாபக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"இதுபோன்ற அறிவற்ற பயங்கரவாதச் செயல்களைச் சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது. எங்களது சிந்தனைகளும் பிரார்த்தனைகளும் இந்திய மக்களுக்காக உள்ளன," என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
"காயமடைந்தோர் விரைவில் குணமடைவர் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 44 ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுள்ளது.