பாகிஸ்தான் தனது பெரிய விமான நிலையங்களின் விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளது. லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களின் விமான நிலையங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவரும் வேளையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானத்துறையைச் சேர்ந்த தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவும் ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் பயண சேவைகளை ரத்து செய்துள்ளது. மேலும் டெல்லிக்கு வடக்கிலுள்ள மொத்த வான்வெளியும் காலி செய்யப்பட்டதாக இந்தியாவின் 'பிடிஐ' செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்திய போர்விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதை இந்தியா மறுத்துள்ளது. தனது போர் விமானிகள் எங்கு உள்ளனர் என்பதை அறிந்திருப்பதாக இந்திய தரப்பு கூறுகிறது. ஆயினும், இந்திய ஆகாயப் படையைச் சேர்ந்த தளபதி அபினந்தனைக் காணவில்லை என்று இந்திய ஊடகங்கள் சில குறிப்பிடுகின்றன.