வாஷிங்டன்: புல்வாமா தாக்குதலுக் குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவிப் பயங்கரவாதிகளின் முகாமைக் குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப் பட்டது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "இந்திய விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசினேன். "அப்போது, வட்டார பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியைப் பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தேன். இதேபோல் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியிடமும் பேசினேன். "அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தேன். "இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையைத் தவிர்த்துவிட்டு, நேரடியாகக் கலந்துரையாடி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வரவேண்டும் என இரு நாடுகளின் அமைச்சர்களிடமும் வலியுறுத்தி உள்ளேன்," என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை துடைத்தொழிக்க அமெரிக்கா வலியுறுத்தல்
1 mins read

