இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலைத் தற்போது ஒத்திவைத்துள்ள நிலையில் போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானின் வாகா பகுதியைக் கடந்து இந்தியாவை அடைந்திருக்கிறார். 'விங் கமாண்டர்' அபிநந்தன் வருகைக்காக அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் இந்திய ஆகாயப் படையினருடன் வழிமீது விழிவைத்துக் காத்திருந்த மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் அவரை நேற்று மாலை வரவேற்றது.
பிப்ரவரி 14ஆம் தேதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்தது. புதன்கிழமை இரு நாடுகளும் தத்தம் எதிரிகளின் விமானங்களை வீழ்த்தியதாகத் தெரிவித்தது. இந்தியாவின் எம்ஐஜி போர்விமானம் பாகிஸ்தானிய மண்ணில் விழுந்ததைத் தொடர்ந்து போர் விமானி அபிநந்தனைப் பாகிஸ்தானிய ராணுவம் பிடித்து தடுப்புக்காவலில் வைத்தது.
"அமைதியை நிலைநாட்டுவதற்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் நாங்கள் கைது செய்திருந்த விமானி இன்று பிற்பகல் விடுதலை செய்யப்படுவார்," என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.
போர் விமானி அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஒவ்வோர் இந்தியரும் பெருமைப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்தப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்பதையும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தினார்.