பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்கவும் திசைதிருப்பவும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருக்கிறது என்றும் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிப்படி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் நேற்று குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அகமது பட்டேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
"இந்தியாவின் எதிரிகளுக்கு எதிராக நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தியாவின் துணிச்சலான ஆயுதப்படைகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம். வன்முறை அல்லது பயங்கரவாதம் மூலம் இந்திய படைகளை யாராலும் தோற்கடிக்க முடியாது," என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
"சிறந்த நிர்வாகம், ஜனநாயக ஆட்சி அமைப்பு, பொருளியல் நிலையைச் சீர்செய்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சமூகநீதி மற்றும் அமைதி ஆகியவற்றை மீண்டும் திருத்தி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது," என்றும் அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 58 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குஜராத்தில் நடைபெறுகிறது. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் பிரியங்கா கலந்துகொள்ளும் முதல் காரிய கமிட்டி கூட்டம் இது.