இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு சகோதரர்களும் அவர்களது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் தலையை அவர்கள் அரிவாளால் வெட்டியதாகவும் போலிசார் கூறுகின்றனர்.
இந்தியாவில் நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு வயது குறைந்த குற்றவாளிகளுடன் தொடர்புடையது என்று சிறார்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாட்டு அமைப்பின் செயற்குழு ஒன்று தெரிவித்தது. பலாத்காரம் செய்தவர்களில் பாதி பேர், அந்தப் பெண்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்று அந்த அமைப்பு கூறியது.
பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலிசார் அந்த மூவரைக் கைது செய்தனர்.
தங்களது குடும்பப் பகையாளிகள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக முதலில் அந்த மூவர் முதலில் கூறியதாக மாவட்ட போலிஸ் அதிகாரி அமிட் சிங் தெரிவித்தார். ஆனால் அவர்களது வாக்குமூலங்களில் முரண்பாடுகளைக் கண்ட போலிசார் சந்தேகம் அடைந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இறுதியில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
"பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போலிசாரிடம் புகார் செய்யப்போவதாக மிரட்டியபோது அந்த மூன்று ஆடவர்களும் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர், அந்தப் பெண்ணின் தலையை வெட்டி அவரது சடலத்தைத் தூக்கி வீசினர்," என்று திரு சிங் தெரிவித்தார்.