இந்தியாவுக்கு 'எம்-ஹெச் 60ஆர்' ரகத்தைச் சேர்ந்த 24 ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் பெருகி வரும் நேரத்தில் அமெரிக்கா தனது நட்பு நாடான இந்தியாவின் ராணுவ ஆற்றலுக்குக் கூடுதல் வலு சேர்க்க இவ்வாறு உதவியுள்ளது.
2.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா கடந்தாண்டு விண்ணப்பித்திருந்தது. அந்த ஹெலிகாப்டர்கள், கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டுபிடித்து அவற்றை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தப்படலாம். மேலும், கடலில் தேடல் பணிகளை மேற்கொள்வதற்கும் இவை பயன்படுத்தப்படலாம்.
"இந்த விற்பனை நடவடிக்கையால் இந்திய-அமெரிக்க உறவு வலு பெறும். இதனால் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை, தேசிய பாதுகாப்பு ஆகியவை வலு பெறும்," என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
தென்னாசிய வட்டாரத்திலும் இந்தோ-பசிஃபிக் வட்டாரத்திலும் அரசியல் நிலைப்பாடு, அமைதி, பொருளியல் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இந்தியா முக்கிய சக்தியாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
அண்மை காலத்தில் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளது.