பயங்கரவாதிகளை அவர்களின் இருப்பிடத்திலேயே கொல்வது புதிய இந்தியாவின் கொள்கை என்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கொண்டுள்ள அதே நிலைப்பாடு காங்கிரசுக்கும் இருப்பதாகத் திரு மோடி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்ட உரையின்போது தெரிவித்தார்.
"பாகிஸ்தான் உருவானதற்கு காங்கிரசே காரணம். சுதந்திரத்திற்கு முன்பு அப்போதைய காங்கிரஸ் தலைவர் விவேகத்துடன் நடந்திருந்தால் நாடு பிளவுபட்டிருக்காது. அதே காங்கிரஸ் இப்போது நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளைத் தாழ்த்தும் விதமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்" என்று திரு மோடி சாடினார். பயங்கரவாதத்தை ஒழிக்க பாரதிய ஜனதாக் கட்சி உறுதியாக இருப்பதாக அவர் பிரசார மேடையில் சூளுரைத்தார்.
இதற்கிடையே திரு மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையே யார் மக்களிடையே அதிகமாக பிரபலமாக இருக்கிறார்கள் என்பதையொட்டிய கருத்துக்கணிப்பு ஒன்றில் திரு மோடி முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிஎன்என் நியூஸ் 18 நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில் பாஐகவுக்கு 263 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 139 இடங்களும் கிடைக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.