இலங்கையின் தேவாலயங்கள், நட்சத்திர தங்கும் விடுதிகள் உட்பட இதுவரை மொத்தம் 8 பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஏப்ரல் 21) தொடா் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதில் குறைந்தது 189 பேர் உயிரிழந்துள்ளனர், 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான சமூக ஊடகத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்புகள் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா போன்ற நட்சத்திர தங்கும் விடுதிகளிலும் நடைபெற்றன. இந்நிலையில் குண்டு வெடிப்பு நடந்த சற்று நேரத்திற்கு முன்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் தங்கி இருந்த நடிகை ராதிகா அறையை காலி செய்து விட்டு புறப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''கடவுளே... இலங்கையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. கடவுள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நான் தற்போது தான் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து கிளம்பினேன். அங்கும் குண்டு வெடித்துள்ளது. நம்ப முடியவில்லை இது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
"OMG bomb blasts in Sri Lanka, god be with all. I just left Colombo Cinnamongrand hotel and it has been bombed, can't believe this shocking.- Radikaa Sarathkumar (@realradikaa) April 21, 2019"