புதுச்சேரி: கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
முதல்வர் நாராயண சாமியுடன் அதிகார யுத்தம் இருந்துவரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்விதமாக அமைந்து உள்ளது.
புதுச்சேரி அரசாங்கத்தின் அன்றாட செயல்பாடுகளை ஆய்வுசெய்ய கிரண் பேடிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு நிகராக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, ஆணைகளைப் பிறப்பிப்பது என வரம்பு மீறிய செயல்பாடுகளை துணைநிலை ஆளுநர் மேற்கொண்டு வந்தார். அவரது இந்த நடவடிக்கைகள் அரசின் அதிகாரங்களில் தலையிடுவதற்குச் சமம் என்பதால் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கூறி லட்சுமி நாராயணன் எம்எல்ஏ உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, உள் துறை அமைச்சு, துணைநிலை ஆளுநர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மகாதேவன், கிரண் பேடிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.