புதுடெல்லி: குட்டைப்பாவாடை அணியும் பெண்களே பாலியல் வன்செயலுக்குத் தகுதியானவர்கள் என்று டெல்லி உணவகம் ஒன்றில் இளம்பெண்களை விமர்சித்த மற்றொரு பெண்ணின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
குட்டைப்பாவாடை அணிந்து பெண் ஒருவர் தனது தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அந்த இளம் பெண்களை அவர்களது உடையைக் காரணமாகக் காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த இளம்பெண்களின் உடை குறித்துக் கேலி செய்த மற்றொரு பெண், அருகில் இருந்த ஆண்களிடம் நீங்கள் இவர்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் எல்லாம் நீங்கள் பலாத்காரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்றும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தி பாடம் புகட்டுமாறு அங்கிருந்த ஆண்களையும் அவர் அழைத்ததாகத் தெரிய வருகிறது. இதுகுறித்துக் காவல்துறையிடம் அந்த இளம்பெண்கள் புகார் செய்வார்கள் என்று தெரிகிறது.