புதுடெல்லி: பிரியங்கா காந்தியுடன் அமேதி தொகுதியில் நின்றுகொண்டிருக்கும் சிறுவர்கள் மோடிக்கு எதிரான முழங்கங்களை எழுப்புகின்றனர். அவர்களை சாந்தப்படுத்தி, அவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என பிரியங்கா காந்தி அறிவுறுத்தும் காணொளி வைரலாகி வருகிறது. முன்னதாக மற்றொரு காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.
அதில் மோடிக்கு எதிராக குழந்தைகள் முழங்க, பிரியங்கா அதை சிரித்து ரசிப்பதுபோல இருந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர், பிரியங்கா காந்திக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்த காணொ ளியை டுவிட்டரில் பகிர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, `அருவருப்பின் உச்சம். பிரதமர் ஒருவருக்குக் கிடைக்கும் வசைமொழிகள் குறித்து எண்ணிப்பாருங்கள்,"என்று சாடியிருந்தார்.
இதைத்தொடர்ந்து முழு காணொளியும் வெளியிடப்பட்டது. அந்தக் காணொளியில், பிரியங்கா காந்திக்கு முன்பு நின்றுகொண்டு சிறுவர்கள் கூட்டாக இணைந்து, மோடிக்கு எதிரான முழங்கினர். அவர்கள் பேசுகையில், `சவுகிதார் ஒரு திருடன்" என்று மோடியை திட்டுகிற பாணியில் சிறுவர்கள் கூச்சலிடுகின்றனர். உடனே அவர்களை பிரியங்கா காந்தி தடுக்கிறார். உடனே வாயில் கைவைத்துகொண்டு, `இதுவல்ல; இதுபோன்று பேசுவது நல்லதல்ல; நல்ல குழந்தைகளாக இருங்கள்" என்று அறிவுரை கூறுகிறார்.
பிரியங்கா காந்தி கூறிய பிறகு சிறுவர்கள் தாங்கள் கூச்சலிடுவதை நிறுத்திக்கொண்டனர். பின்னர் அவர்கள், `ராகுல்காந்தி ஜிந்தாபாத்' என்று முழக்கங்களை எழுப்பினர். இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. பிரியங்காவின் இச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
"காங்கிரஸை கடுமையாக சாடிவரும் மோடிக்கு எதிராக பேசுகையில், அதை பிரியங்கா நாகரிகமான முறையில் தடுத்திருப்பது வர வேற்கத்தகது," என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் முழு காணொளியையும் பார்க்காமல் பிரியங்கா காந்தியை விமர்சித்த ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக-வினர் செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் பிரியங்காவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.