இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. 1991ஆம் ஆண்டு திரு காந்தி சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பில் ஏழு பேர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரை விடுதலை செய்ய 2014ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தாக்குதலில் மாண்டோர் சிலரின் குடும்பத்தினர் அதே ஆண்டில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தாக்குதலில் மொத்தம் 16 பேர் மாண்டதுடன் பலர் படுகாயம் அடைந்தனர்.