புதுடெல்லி: விமானப் பயணிக ளுக்கு மிகப்பெரும் தள்ளுபடி விலையில் பயணச்சீட்டுகளை விற்கப் போவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடைசி தருணத்தில் பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு இந்தச் சலுகை பெரிதும் கைகொடுக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
மே 10ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என அந்நிறுவனம் முன்பே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடைசி நேரத்தில் பயணச்சீட்டுகளை வாங்குபவர்க ளுக்கு ஏர் இந்தியா 50 விழுக்காடு அளவுக்கு தள்ளுபடி அளிக்க இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் ஏர் இந்தியா தரப்பில் எவ்வளவு விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என்பதை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அவசர விவகாரங்களுக்காக கடைசி நேரத்தில் விமானச்சீட்டு பெறுபவர்கள் வழக்கமான விலையை விட 40 விழுக்காடு அளவுக்கு அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடங்கி இருப்பதால், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களும், வெளிநாடு களில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களும் விமானப் பயணச் சீட்டுக்காக அதிக தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத் துள்ளது.