மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியைப் பற்றிய 'மீம்ஸ்' எனப்படும் கேலிப்படங்களை வெளியிட்டதற்காக பிரியங்கா சர்மா என்பவர் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடையில் அந்நடிகையின் முகம் இருக்கவேண்டிய இடத்தில் மம்தாவின் முகத்தை இணைத்தார் பிரியங்கா. அதனைக் காட்டும் 'மீம்ஸ்' படங்கள் சமூக ஊடகங்களில் தீயெனப் பரவின. இந்திய அரசியல் குறித்த பொது அறிவும் ஆர்வமும் இல்லாத பலருக்கு இடையே மம்தா கேலிப்பொருளாகத் திடீரென பிரபலமானார். இதனை அடுத்து திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரியங்கா சர்மா மீது புகார் அளித்தார். புகாரை ஏற்று போலிசார் பிரியங்காவைக் கைது செய்தனர்.
பிரியங்காவைப் பிணையில் விடுவிக்கக் கோரும் வழக்கு இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனையுடன் பிணையை வழங்கியது. இது பேச்சுச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று பிரியங்காவின் வழக்கறிஞர் வாதிட்டபோதும் அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், பேச்சு சுதந்திரம் மற்றவர்களைப் புண்படுத்துவதற்காக அல்ல எனத் தெரிவித்தது.

