தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றது. அதிமுக கூட்டணியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாமல், நோட்டாவில் தங்கள் வாக்கைப் பதிவுசெய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிவான மொத்த வாக்கு விகிதத்தில் 1.8 விழுக்காடாகும்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் சிலரை விட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றது.
கடலூர் மக்களவைத் தொகுதிதேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதிமய்யம் உள்பட மேலும் பல பதிவு பெற்ற அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளுமாக 21 பேர் களத்தில் இருந்தனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அஞ்சல் வாக்குகளில் பதிவான 65 வாக்குகளுடன் 8,725 வாக்குகளை நோட்டா பெற்றது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கையைவிடக் குறைவாக பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சி.ஜெயபிரகாஷ் (2,827), அகில ஊழல் தடுப்பு இயக்கத்தின் வேட்பாளர் குப்புசாமி (7,540), தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் செல்லதுரை (2,527) உட்படப் பல கட்சி வேட்பாளர்கள் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.
சென்னையின் 3 மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் மட்டும் மொத்தம் 48 ஆயிரத்து 911 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
மூன்று மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி ஆகியவற்றில் மொத்தம் 28 லட்சத்து 66 ஆயிரத்து 852 பேர் வாக்களித்தனர்.
அதிகபட்சமாக தென்சென்னையில் 16,891 பேர், வடசென்னையில் 15,687 பேர், மத்திய சென்னையில் 13,822 பேர், பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 2,511 பேர் என மொத்தம் 48 ஆயிரத்து 911 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நோட்டா வாய்ப்பைப் பயன் படுத்திய வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நோட்டா வாய்ப்பை 1.44 விழுக்காட்டு வாக்காளர்கள் (5.82 லட்சம் பேர்) பயன்படுத்தினர்.
இந்த மக்களவைத் தேர்தலில் நோட்டாவை 1.28 விழுக்காடு வாக்காளர்கள் பயன்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்காடு இடைத்தேர்தலின்போது முதல் முறையாக நோட்டா வாய்ப்புப் பயன்படுத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் 4,076 வாக்காளர்கள் நோட்டா வாய்ப்பினைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, கடந்த மக்களவைத் தேர்தலை விட இந்த ஆண்டு நோட்டாவின் மவுசு குறைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.
இதற்கு மாற்று சக்திகள் என்ற வகையில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தேர்தலில் களம் கண்டதே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

