அமராவதி: சந்திரபாபு நாயுடுவுக்கு ஆண்டவன் தண்டனை கொடுத்து விட்டார் என்று ஆந்திர மாநில முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் சட்டப் பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது.
இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வான 151 எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் அமராவதியில் உள்ள தடபள்ளி இல்லத்தில் நேற்று நடந்தது.
மூத்த தலைவர் போட்ஸா சத்யநாராயணா ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரைச் சட்டப்பேரவை தலைவராக முன்மொழிந்தார். அதன்பின் தர்மன பிரசாத் உள் ளிட்டோர் வழிமொழிந்த பின் ஒரு மனதாக முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டித் தேர்வுச் செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன், “கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் நமது கட்சியில் உள்ள 23 எம்எல்ஏக்களை சந்திரபாபு நாயுடு விலைக்கு வாங்கினார். ஆனால் இப்போது இந்த முறை தேர்தலில் 23 எம்எல்ஏக்கள் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சிக்குக் கிடைத்துள்ளார்கள்.
“23 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய சந்திரபாபு நாயுடுவுக்கு 23 பேரை மட்டுமே கொடுத்து அழ கான தீர்ப்பை ஆண்டவன் எழுதி விட்டார்.
“சட்டவிரோதமாக எங்களின் 3 எம்.பி.க்களைச் சேர்த்துக் கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த முறை 3 எம்.பி.க்கள் மட்டுமே கிடைத்துள்ளனர்.
“நமக்கு கிடைத்த வெற்றியின் மூலம் என் தந்தையின் வார்த்தைகள் பலித்துவிட்டன.
“50 விழுக்காடு வாக்குகளை மக்களிடம் இருந்து பெறுவது சாதாரண விஷயமல்ல. மக்களின் நம்பிக்கையை நிறைவு செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.
“2024 ஆம் ஆண்டும் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அனைவரும் மக்கள் பணியாற்ற வேண்டும்,” என்று ஜெகன்மோகன் ரெட்டித் தெரிவித்தார்.
இதற்கிடையே, முதல்கட்டமாக ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகி றது.
அப்போது மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அவர் பேசக்கூடும் எனத் தெரிகிறது.
மத்திய அரசுடனும் பிரதமர் மோடியுடனும் நல்லுறவைப் பேண அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.