இந்தியத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை இந்தியாவின் பிற மாநிலங்களைத் தமிழகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வட மாநிலங்களில் கோலோச்சிய அளவுக்கு தமிழகம்,
ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற தென் மாநிலங்களால் பாஜக வெற்றிபெற இயலவில்லை.
இதற்கான காரணம் பற்றி பல்வேறு அரசியல் கவனிப்பாளர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டுவரும் நிலையில், மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், தமிழக மக்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால் இந்தி மொழி, வட இந்திய மனப்பான்மை போன்றவற்றிலிருந்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வெளிவந்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி கழிவறைகளைக் கட்டியது, இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தியது போன்ற மக் களின் உணர்வுகளுடன் தொடர்புடைய திட்டங்களைச் செயல்படுத்தியதால்தான் பண மதிப்பிழப்பு, பொருள் சேவை வரி போன்றவற்றை நடை முறைப்படுத்திய பின்னரும் பாஜகவின் பெருவெற்றி சாத் தியமானது என்றார் திரு ராகவன்.
தமிழக ஆட்சியை மாறி, மாறி பற்றிக்கொண்டிருக்கும் அதிமுக, திமுக கட்சிகளின் தூண்களாக இருந்த ஜெய லலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லாத நிலை யில் தமிழக மக்களின் தேவை களை உணர்ந்து செயல்பட்டிருந் தால் தமிழகத்திலும் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்க முடியும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங் கள் தமிழக விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில் பாஜக ஒரு வட இந்தியக் கட்சி என்ற அவர்களது எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தமிழக பாஜக தலைவர்கள் தவறிவிட்டனர் என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள் சிலர்.
தமிழகத்திலும் பாஜக வெல்ல வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள திரு ராகவன், மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய தமிழர்கள் மத்தியில் இந்தி மொழிப் பெயர்களைக் கொண்ட திட்டங்கள் அவர்களைச் சென்று சேர்வதில் சிரமம் உள்ளது என்றார்.
அத்துடன், ஏதோ சில கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மட்டும் தமிழகத்துக்கு சில மணி நேரம் எட்டிப் பார்ப்பதைத் தவிர்த்து, மக்களுக்குத் தேவையான நேரத்தில், தமிழகத்துக்கு வந்து உறவை வளர்ப்பது அவசியம் என்கிறார் அவர்.
தமிழகத்தில் திறமையான தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தமிழக பஜக பொறுப்பையும் மேலிடத் தலையீடு இல்லாத முழு சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் கொடுத்தால் தமிழகத்தில் பாஜக வளரும் என்று திரு ராகவன் மேலும் குறிப்பிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவின் படுதோல்விக்கு தமிழக பாஜக தலைமை உட்பட சில ஆதரவாளர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு பாஜக தமிழகத் தலைமை திறம்பட செயல்பட வில்லை என்று சிலர் பதிலளித் திருப்பதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. ஆனால், கட்சி தங்களுடன் இருப்பதாகவும் தங்களது தேர்தல் பணிகளுக்கு மேலிடம் பாராட்டு தெரிவித்ததாகவும் டாக்டர் தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.