திஸ்பூர்: கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஒருவரை சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர் எனக் கூறி கைது செய்த சம்பவம் அசாமில் பரபரப்பைக் கிளப்பியது. இந்திய ராணுவத்தில் லெப்டினென்டாகப் பணி புரிந்த முகம்மது சனாவுல்லா, 52, ஈராண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்றார். இப்போது எல்லைக் காவல் படையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பங்ளா தேஷில் இருந்து வந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி, சட்டவிரோதக் குடியேறிகளுக்கான தடுப்பு மையத்தில் போலிஸ் அவரை அடைத்து வைத்தது. பின்னர் உண்மை தெரியவர, அவரை விடுவித்த போலிஸ், தனது செயலுக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. ஆயினும், தன்னை வெளிநாட்டவர் என முத்திரை குத்திய வெளிநாட்டுத் தீர்ப்பாயத்தின் மீது கௌஹாத்தி உயர் நீதி மன்றத்தில் திரு சனாவுல்லா வழக்குத் தொடுத்துள்ளார்.