'பயங்கரவாதி' துணை நடிகர்கள் கைது

'பயங்கரவாதி' துணை நடிகர்கள் கைது

1 mins read

மும்பை: பயங்கரவாதிபோல் வேடமிட்டு தெருக்களில் உலவிய துணை நடிகர்கள் இருவரை மும்பை போலிசார் கைது செய்து, வழக்குப் பதிந்தனர். பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் நடித்துவரும் புதிய திரைப்படத்தில் பல்ராம் கின்வாலா, அர்பாஸ் கான் என்ற அவ்விருவரும் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாதி உடையில் அவர்கள் இருந்ததைக் கண்டதும் அனில் மகாஜன் என்ற வங்கிக் காவலாளி, போலிசுக்குத் தகவல் அளித்தார். இதை அடுத்து, சிசிடிவி துணையுடன் அவ்விருவரும் பேருந்தில் பயணம் செய்வதைக் கண்டுபிடித்த போலிஸ், அவர்களைப் பிடித்து, விசாரித்தது. அதன்பிறகே உண்மை தெரியவந்தது. ஆயினும், தேவையின்றி பதற்றத்தை ஏற்படுத்தி, அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீதும் திரைப்படக் குழு மீதும் போலிஸ் வழக்குப்பதிவு செய்தது. விழிப்புடன் செயல்பட்ட அனிலுக்கும் போலிஸ் பாராட்டுத் தெரிவித்தது.