கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவில் பெண் நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மந்தமான உள்நாட்டுப் பொருளியல் வளர்ச்சி, கூடிவரும் அனைத்துலக அபாயம் ஆகியவற்றைச் சமாளிக்கும் பொறுப்பு இப்போது 59 வயது திருமதி நிர்மலா சீதாராமனின் கைகளுக்கு வந்துள்ளது.
உடல்நிலை குன்றியதால் அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்ற அருண் ஜெட்லி மறுத்ததை அடுத்து திருவாட்டி நிர்மலா எதிர்பாராதவிதமாக இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருமதி இந்திரா காந்திக்கு அடுத்து நிதியமைச்சர் பதவியை ஏற்றுள்ள ஒரே பெண் இவர்தான்.
2014ஆம் ஆண்டில் திரு மோடியின் அமைச்சரவையில் சேர்வதற்கு முன்னர் திருவாட்டி நிர்மலா பாரதிய ஜனதாக் கட்சியின் பேச்சாளராகப் பணியாற்றினார். புதுடெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவர் பொருளியல் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். லண்டனின் ‘பிரைஸ்வாட்டர் ஹவூஸ்’ தணிக்கை நிறுவனத்தில் அவர் ஆய்வு நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவின் கடந்தாண்டு பொருளியல் வளர்ச்சி விகிதம் 6.9 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் ஆகக் குறைவான விகிதம். மந்தத்தை சரிசெய்யக்கூடிய வரவு செலவுத் திட்டத்தை திருவாட்டி நிர்மலா ஜூலை மாதத்திற்குள் தயார் செய்யவேண்டும்.