புதுடெல்லி: இனி அரசுப் பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மெட்ரோ ரயில்களில் கட்டணம் அதிகம் என்பதால் டெல்லி பெண்கள் அதில் பயணம் செய்வதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் மாநிலம் முழுவதும் இயங்கும் பேருந்துகளில் 40 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர் என்றும், அவர்களில் 30 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் மெட்ரோ ரயில்களிலும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பய ணம் மேற்கொள்கின்றனர்.
“அதிக கட்டணம் என் பதால் பேருந்து, மெட்ரோ ரயில்களைத் தவிர்க்கும் பெண்களுக்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
“எனினும் பயணச்சீட்டு வாங்கும் அளவுக்கு வசதி படைத்த பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உண்மையிலேயே தேவைப் படும் பெண்களுக்கு இச் சலுகையை விட்டுத்தர வேண்டும்,” என்றும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்திட்டத்தால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.