தமிழக மின்வாரியத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ள பிற மாநிலத்தவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக்கொள்ளாவிடில் அவர்களது வேலை பறிக்கப்படும் என்று தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
"இந்திய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில்தான் தமிழக மின்வாரியத்தில் பிற மாநிலத்தைச் சேர்ந்த 36 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்மொழியைக் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் பணியை இழக்க நேரிடும். இதுதான் சட்ட விதிமுறை ஆகும்.
கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள், மின்மாற்றிகள் பழுதாகின. இதனால் ஆங்காங்கே சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. இவற்றை மின்வாரிய ஊழியர்கள் உடனடியாகச் சரிசெய்துவிட்டனர். தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை," என்றார் அமைச்சர் தங்கமணி.

