ஹைதராபாத்: ‘சந்திராயன்-2’ விண்கலம் எதிர்வரும் ஜூலை 15ஆம் தேதி அதிகாலை வேளையில் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைவர் கே.சிவன், இந்த விண்கலம் செப்டம்பர் முதல் வார இறுதியில் நிலவைச் சென்றடையும் என்றார்.
நிலவின் தென் பகுதியில் விண்கலம் தரையிரங்கும் என்று குறிப்பிட்ட அவர், நிலவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத ஆய்வை ‘சந்திராயன்-2’ மூலம் சாதிக்க முடியும் என்றார்.
“மொத்தம் 3.8 டன் எடையுள்ள இந்த விண்கலம், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. சந்திரயான் - 2 விண்கலம், 603 கோடி ரூபாயிலும், அதை ஏந்திச் செல்லும் ராக்கெட் 375 கோடி ரூபாய் செலவிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
“இந்த விண்கலத்துடன் 13 ஆய்வுக் கருவிகளும் அனுப்பப்பட உள்ளன. இதன் மூலம் விண்வெளி ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்,” என்றார் சிவன்.