புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகளை இணைத்து ஒரே கட்சியாக உருவாக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் அஜீஸ் பாட்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.), ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தி வருகிறது என்றும் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான நிலை இருப்பது தெரியவந்துள்ளது என்றும் அஜீஸ் பாட்ஷா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.