இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பரவி வரும் மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகிவிட்டன. இவர்களில் 55 குழந்தைகள் முஸாஃபர்
பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாண்டனர். இந்த மருத்துவனையில் 44 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை எட்டு குழந்தைகளும் நேற்று பிற்பகல் வரை மூன்று குழந்தைகளும் மாண்டதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்கே ஷாஹி கூறினார்.
மூளைக்காய்ச்சல் வேமாகப் பரவுவதற்கு பீகார் மாநிலம் முழுவதும் காணப்படும் உச்சக்கட்ட வெப்பநிலை முக்கிய காரணம் என்றார் அவர்.
இந்நிலையில், கொளுத்தும் வெயிலின் வெப்பம் தாங்காமல் நேற்று முன்தினம் மட்டும் பீகாரில் 40 பேர் உயிரிழந்துவிட்டனர். அவுரங்காபாத் மாவட்டம்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வீசும் அனல்காற்றுக்கு 27 பேர் பலியானார்கள்.
வெப்பத்தால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பலர் தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த அவுரங்காபாத் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றார். இதற்கிடையே, வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.