புதுடெல்லி: மக்களவையில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் “தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்க,” என்று கூறி பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.
முன்னதாக மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாகப் பதவியேற்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்பிக்களும் இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, தெலுங்கு என அவரவர் வட்டார மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் எம்பிக்கள் பதவி ஏற்றனர். தமிழக எம்பிக்கள் தொகுதி வாரியாகப் பதவி ஏற்றனர்.
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் தமிழில் “காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க,” என்று கூறி பதவியேற்றார். அதுபோலவே வட சென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமி பதவியேற்றார். தொடர்ந்து தமிழக எம்பி தயாநிதி மாறன் “பெரியார், கருணாநிதி வாழ்க,” எனக் கூறி பதவியேற்றார்.
அவரைப் போலவே டி.ஆர். பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பதவியேற்றனர். விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் “தமிழ் வெல்க,” எனக் கூறி பதவியேற்றார்.
சிதம்பரம் தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் “அம்பேத்கர், பெரியார் வாழ்க, வாழ்க ஜனநாயகம்,” எனக் கூறி பதவியேற்றுக்கொண்டார்.
இதுபோலவே திமுக எம்.பி கனிமொழியும் தமிழில் பதவி யேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் “தமிழ் வாழ்க’ என்று தமிழக எம்பிக்கள் சொன்னபோதெல்லாம் வடமாநில எம்பிக்கள் ‘பாரத் மாதாகீ ஜே’ என்று கோஷமிட்டர்.
அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் குமார் பதவி ஏற்று முடித்ததும் “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்,” என்று குறிப்பிட்டார். அப்போது பாஜக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் கள் ஆ.ராசா, பழனி மாணிக்கம், நவாஷ்கனி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் எதுவும் குறிப்பிட வில்லை.
வசந்தகுமார் பதவி ஏற்று முடித்ததும் “ஜெய் ஜவான், ஜெய் கிஷான், பெருந்தலைவர் காமராஜர் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க,” என்று கூறினார். அத்துடன் தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிறைவுபெற்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் தமிழிலேயே பதவி ஏற்றுக் கொண்டது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.