பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சமாஜ்வாதி கட்சியுடனான தனது கூட்டணியை முறித்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார். இனி வரும் மாநிலத் தேர்தல்களிலும் பொதுத்தேர்தல்களிலும் தமது கட்சி தனித்தே போட்டியிடும் என்று திருவாட்டி மாயாவதி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்விற்கு எதிராக தமது அதிருப்தியையும் மாயாவதி தமது பதிவுகளில் வெளிப்படுத்தினார்.
“ 2012ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையே இருந்த சமாஜ்வாதி மாநில அரசாங்கம் தலித் மக்களுக்கு எதிராகவும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருந்தபோதும் பொதுமக்களின் நலனைக் கருதி நாங்கள் இவற்றையெல்லாம் புறம் தள்ளி அக்கட்சியுடன் கூட்டணியில் இணைந்தோம். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் சமாஜ்வாதியினர் நடந்துகொண்ட விதத்தால், பாரதிய ஜனதாக் கட்சியிரை வரும் தேர்தலில் தோற்கடிக்க முடியுமா என்பது குறித்து எங்களுக்குச் சந்தேகமாக உள்ளது,” என்று மாயாவதி கூறினார்.
கடந்த பொதுத்தேர்தலின் முடிவுகளுக்குப் பின்னர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னை அழைத்துப் பேசவே இல்லை என்றும் மாயாவதி கூறினார்.
கடந்தாண்டு நடந்த இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தபோதும் இவ்வாண்டின் பொதுத்தேர்தலின்போது மாநிலத்தின் 80 இடங்களில் 15ல் மட்டும் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாக் கட்சி 62 இடங்களைப் பெற்று உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் வெற்றியை அடைந்தது.