காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இவ்வாண்டில் இடைத்தேர்தல்களை எதிர்நோக்கும் மாநிலங்களின் மூத்த காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார். புதுடெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்ஷித்தையும் அவர் சந்திக்க உள்ளார்.
கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்பு அறிவித்த திரு ராகுலைத் தொடர்ந்து தலைவராக இருக்கச் செய்ய அவரது கட்சியினர் பாடுபட்டு வருகின்றனர். இப்போது திரு ராகுல் அவரது பதவிக்குரிய வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருவதைக் கண்ட அவரது கட்சியினர் ஊக்கமடைவதாகக் கூறப்படுகிறது.
கடந்த பொதுத்தேர்தலின் முடிவுகள் காங்கிரஸுக்குப் பாதகமாய் முடிந்த நிலையில், திரு ராகுல் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. கட்சியின் எந்தச் சந்திப்புக்கும் அவர் செல்லவில்லை. தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அவர் தமது கட்சியினரிடம் தெரிவித்தபோதும் கட்சி நிர்வாகத்தினர் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.
திரு ராகுல் மெல்ல மெல்ல வழக்கப் பணிகளைத் தொடங்கும் நிலையில், அவர் இனி வெளியேறுவாரா இல்லையா என்ற கேள்விக்குறி மேலோங்குகிறது.