இந்தியாவில் உடனடி முத்தலாக் வழியாக விவாகரத்து செய்யப்படுவதைத் தடை செய்யும் குற்றவியல் சட்டம் பெண்ணுரிமையுடன் தொடர்பானது என்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இதனைச் செய்யத் தவறிய காங்கிரஸ், தமது அரசாங்கத்தின் முயற்சிக்கு இடையூறு விளைவிக்க முயலக் கூடாது என அவர் கூறினார்.
உயரப் பறக்கும் காங்கிரஸ், நடைமுறை உண்மைகளைப் புரிந்துகொள்ளத் தவறுவதாகத் திரு மோடி தெரிவித்தார். 1950களில் அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான குடியியல் சட்டத்தை அறிமுகம் செய்ய காங்கிரஸ் தவறியதை அவர் சுட்டினார்.
முத்தலாக் விவாகரத்தைத் தடை செய்யும் சட்ட மசோதாவின்படி, குற்றம் இழைக்கும் ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிப்பதைப் பெரும்பாலான கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இத்தகைய கடுமையான தண்டனை முஸ்லிம் ஆடவர்களுக்குப் பாதகமானது என்பது அவர்களது வாதம்.