காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தாம் ஏற்கெனவே விலகியிருப்பதால் தாமதமின்றி அக்கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த இந்தியப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. பதினேழு மாநிலங்களில் அந்தக் கட்சி எந்த ஒரு நாடாளுமன்ற இடத்தையும் பெறாததால் பெரும் அவமானத்திற்கு உள்ளானது. இதனால் திரு ராகுல், மே மாதம் 25ஆம் தேதி நடந்த தேர்தலுக்குப் பிந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தின்போது தாம் பதவி விலகப்போவதாக அறிவித்தார். அவரது முடிவை செயற்குழு நிராகரித்தபோதும் திரு ராகுல் தமது முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனக் கூறினார். கட்சியைச் சேர்ந்த ஒருசில தலைவர்கள் பதவி விலகியபோதும் தமது முடிவை மாற்றிக்கொள்ள அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் திரு ராகுல், தாமதமின்றிப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க இன்று தமது கட்சியினரிடம் மீண்டும் கேட்டுக்கொண்டார். "புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் ஏற்கெனவே என் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளேன். இனி நான் காங்கிரசின் தலைவர் இல்லை" என்று திரு ராகுல் நாடாளுமன்றக் கட்டடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

