இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கொலை குற்றவாளி என்று காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி பொதுத்தேர்தல் பிரசாரத்தின்போது வர்ணித்ததன் தொடர்பில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி குஜராத் மாநிலத்தின் ஆமதபாத் நீதிமன்றம் மறுபடியும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
“மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூரில் திரு ராகுல், திரு ஷாவைப் பற்றி இவ்வாறு பேசினார். கொலை குற்றவாளியான அமித் ஷா, தேசியக் கட்சியான பாஜகவின் தலைவராக இருக்கிறார். இது எவ்வளவு பெருமை,” என்று வசைமொழிந்தார்.
2015ஆம் ஆண்டில் ‘என்கவுன்டர்’ வழக்கிலிருந்து மத்திய புலனாய்வு நீதிமன்றம் திரு ஷாவை விடுதலை செய்தபோதும் அவரைக் குற்றவாளி என அழைப்பது நீதிமன்ற அவமதிப்பு என்று திரு ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர் குறிப்பிட்டார்.
இந்த அவதூறு வழக்கில் முகாந்திரம் உண்டு என்று மே மாதம் 1ஆம் தேதி கூறிய நீதின்றம், ஜூலை 6ஆம் தேதி திரு ராகுல் முன்னிலையாகவேண்டும் என்று உத்தரவிட்டது. திரு ராகுல் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இந்திய நாடாளுமன்ற நாயகர் மூலமாக அழைப்பாணையை அனுப்ப நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால் இதில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நாடாளுமன்ற நாயகர் கூறியதை அடுத்து திரு ராகுலுக்கு மறுபடியும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.