சட்டமன்றங்களில் புறந்தள்ளப்படும் காங்கிரஸ்

சட்டமன்றங்களில் புறந்தள்ளப்படும் காங்கிரஸ்

1 mins read
98a035d5-ab75-4ea9-ae2e-ee953ffec0c3
காங்கிரஸ் கட்சியின் கொடி. (படம்: ராய்ட்டர்ஸ்) -

கர்நாடகாவின் ஆளுங்கூட்டணி ஆபத்தின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கோவா மாநிலத்தின் 15 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் பத்து பேர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர். தமது கட்சியில் இணைந்த அந்த எம்எல்ஏக்களைப் பாராட்டிய கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், "பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது 27 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் எந்தக் கட்டாயமுமின்றி மாநில முன்னேற்றத்திற்காகவும் தங்கள் முன்னேற்றத்திற்காகவும் எங்களுடன் சேர்ந்தனர்," என்று தெரிவித்தார்.

இந்தப் பத்து எம்எல்ஏக்கள் நேற்று கோவாவின் சட்டமன்றத் தலைவரை நேரில் சந்தித்து அவரிடம் தங்களது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தனர். இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு அவர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திப்பர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுபோல தெலங்கானா மாநில சட்டமன்றத்தில் 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பன்னிரண்டு பேர் மாநிலக் கட்சி ஒன்றில் இணைந்தனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாக் கூட்டணியில் தொடர்ந்து இருக்க விரும்பாத 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிலைமை சிக்கலாக உருவெடுத்துள்ளது. அவர்களது பதவி விலகல் கடிதத்தை ஏற்க கர்நாடக சட்டமன்றத் தலைவர் மறுத்துள்ளார். அந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்கும் மும்பை ஹோட்டலுக்குள் சென்று அவர்களிடம் கலந்து பேச காங்கிரஸ் அமைச்சர்கள் பலவாறு முயன்றும் பலத்த போலிஸ் காவலால் அவர்களால் முடியவில்லை.

குறிப்புச் சொற்கள்