புதுடெல்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றதும் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனி, பாஜகவில் இணைந்து தனது விறுவிறுப்பான புதிய அரசியல் ஆட்டத்தைத் தொடங்குவார் என்று பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவருமான சஞ்சய் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "டோனி எனது நண்பர். உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான அவரை பாஜகவுக்குள் இழுப்பதற்கு பலகாலமாக முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து டோனி ஓய்வுபெற்ற பிறகே இது சாத்தியமாகும் என உறுதியாகக் கூறமுடியும்.
"ஒருவேளை டோனி பாஜக வில் இணைந்தால் அவர் ஜார்க்கண்டுக்கான பாஜக முதல்வர் வேட்பாளராகக் கூட அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
டோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் இந்த ஆண்டு் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே அப்போது டோனியின் பாஜக பிரவேசம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் டோனி சந்தித்ததையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் இதுகுறித்து அவரது ஓய்வுக்குப் பின்னரே அவரால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும் என்றும் கூறியுள்ளார்.