பெங்களூரு: ஒருபுறம் பதவி விலகிய கர்நாடகா அமைச்சரை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர்கள் இறங்கியுள்ள நிலையில், மறுபுறம் நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றிபெறுவது நிச்சயம் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமியின் மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், காங்கிரசில் நிலவிய உட்கட்சி பூசல், மஜத தலைமை மீது எழுந்த அதிருப்தி காரணமாக இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் பதவி விலகினர்.
ஆனால் இந்த பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்காமல் காலம் தாழ்த்தியதால் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி பதவி விலகிய கர்நாடக மூத்த அமைச்சர் எம்.டி.பி.நாகராஜை காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து, பதவி விலகும் முடிவை மறுபரிசீலனை செய்து வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி உள்ளனர்்.
இதற்கிடையே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கூறுகையில், "குமாரசாமியும் நானும் ஆழமாக விவாதித்தபிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முடிவுக்கு வந்துள்ளோம். ராமலிங்க ரெட்டி எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றிபெறும்.
"இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறும் எடியூரப்பா, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டியதுதானே? அவர் ஏன் பயப்படுகிறார்," என்று கேள்வி எழுப்பியுள்ளார் சித்தராமையா.