கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் எனும் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.
அவ்விண்கலம் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து எடுத்து அனுப்பிய படங்கள் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது முதன்முதலாக உறுதிசெய்யப்பட்டது.
அத்திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, நிலவை விரிவாக ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது.
அதன்படி, ரூ.610 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அந்த விண்கலம் நேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் 56 நிமிடங்களுக்கு முன் அம்முயற்சி நிறுத்தப்பட்டது. அந்த விண்கலம் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பும் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ நான்கு முறை திட்டமிடப்பட்டு, பின் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "சரியான நேரத்தில் கோளாற்றைக் கண்டுபிடித்ததே பெரிய சாதனைதான்," என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி ரவி குப்தா குறிப்பிட்டார்.