கண்ணூர்: அலீனா, ஹெலன், ஜேன் ஆகிய மூவரும் சதையும் ரத்தமும் தோய்ந்த மனிதர்கள் அல்ல. பெண் ரோபோக்கள். கண்ணூரில் கடந்த ஞாயிறன்று புதிதாகத் திறக்கப்பட்ட 'பி@கிவிசோ' என்ற ஹோட்டலில் பரிமாறும் பணியில் ஈடுபடும் இந்த ரோபோக்களின் தோற்றம் அங்கு வரும் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்து வருகின்றன.
"ரோபோ’ என்று அழைக்கப்படும் இயந்திர மனிதக் கருவிகள் பல்வேறு பணிகளிலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"கேரளாவில் ரோபோக்கள் இதுபோல் சேவை வழங்குவது இதுவே முதல்முறை. வெளிநாடுகளிலும் சென்னை நகரிலும்கூட இந்த ரோபோக்கள் சேவை தொடர்கிறது.
"கேரளாவில் உள்ள கண்ணூர் நகர், கோபாலன் தெருவில் செயல்படும் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கவே மூன்று அதிநவீன ரோபோக்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்," என்று நடிகர் மணியன்பிள்ளை ராஜு கூறினார்.
"இந்த ரோபோக்களுக்கு வரவேற்பு கூடும் பட்சத்தில் மேலும் பல இடங்களிலும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்," என்று மேலும் அவர் கூறினார்.
ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்களை அந்த ரோபோக்கள் அன்புடன் அழைத்து இருக்கையில் அமர வைக்கின்றன. பின்னர் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு செல்லும்போது அந்த ரோபோக்கள் 'நன்றி மீண்டும் வருக' என்றும் கூறுகின்றன.
இந்த ரோபோக்கள் வாடிக்கை யாளர்களின் அழைப்பை புரிந்துகொண்டு அவர்களை நோக்கிச் செல்லும். வழியில் யார் நின்றாலும் அவர்களை அன்புடன் விலகிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளும்.
நமக்குத் தேவையான உணவுகளைப் பட்டியலிட்டால் அவற்றை பதிவுசெய்து உணவை கொண்டுவந்து கொடுக்கும்.
உணவு விடுதிக்கு வரும் குழந்தைகளுடன் இந்த ரோபோக்கள் நடனமாடி அவர்களை மகிழ்விப்பதிலும் கில்லாடிகளாக உள்ளன.