மும்பையின் டோங்கிரி பகுதியில் நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிர் இழந்தனர்.
நேற்று முற்பகலில் நடந்த இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணி மிகவும் சிரமமாக உள்ளது. ஒரு குழந்தை உட்பட எட்டுப் பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.
எந்த வாகனமும் செல்ல முடியாத மிகவும் நெரிசலான பகுதியாக இருப்பதால் மனித சக்தியைக்கொண்டே மீட்புப் பணி நடைபெறுகிறது.
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 20 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இயந்திரங்களையோ வாகனங்களையோ பயன்படுத்தி இடிபாடுகளை அகற்ற முடியாத நிலை இருப்பதால் மீட்புப் பணியாளர்களுடன் பொதுமக்களும் இணைந்து இடிபாடுகளை அகற்றி சிக்கி இருப்போரைத் தேடுகின்றனர்.
இதனால் மீட்புப் பணிகள் மந்த நிலையிலேயே நடைபெறுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
டோங்கிரி காவல்துறையினர் விபத்து நிகழ்ந்த பகுதியைச் சுற்றித் தடுப்பு வேலிகளை அமைத்துக் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "விபத்திற்குள்ளான கட்டடம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்டடத்தை இடிக்க 2012ஆம் ஆண்டே உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அது பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது," என்றார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருத்து கூறிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கட்டடத்தை இடிக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான காரணம் என்ன என அப்பகுதி மக்களைக் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமக்குக் கிடைத்த தகவலின்படி ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

