இந்தியாவுக்காக பாகிஸ்தானில் வேவு பார்த்ததாகக் கூறப்படும் குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையும் அறமும் நிலைநாட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அந்தத் தீர்ப்பு உண்மைத் தகவல்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று கூறினார். தமது அரசாங்கம் ஒவ்வோர் இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடும் என்று அவர் டுவிட்டரில் கூறினார்.
திரு ஜாதவ்வின் விசாரணைக்குப் பின்னர் அவரைக் காணச் சென்றிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தடுத்த பாகிஸ்தான் வியன்னா தீர்மானத்தை மீறியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நீதிமன்றம் தெரிவித்தது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 49 வயது திரு ஜாதவ் இந்தியாவுக்காக வேவு பார்த்ததன்பேரில் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனையை விதிக்கத்து பாகிஸ்தான் தீர்ப்பளித்தது.
இந்தியாவுக்குச் சாதகமாக 15 நீதிபதிகள் வாக்களித்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரே நீதிபதி மட்டும் ஜாதவ்விற்கு எதிராக வாக்களித்தார்.