ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரமாக அமையவிருந்த அமராவதிக்கான மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து விலகுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. ஏற்கெனவே பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் அமராவதி திட்டத்தின் எதிர்காலம் மேலும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாகத் தனது இணையத்தளத்தில் அறிவித்த உலக வங்கி, தனது முடிவுக்கான காரணத்தை விளக்கவில்லை. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் வங்கி பதிலளிக்கவில்லை என்று என்டிடிவி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் முன்னைய மாநில நிர்வாகத்தின்போது அமராவதி திட்டத்திற்காகத் தங்களது நிலங்கள் பறிக்கப்பட்டதாக விவசாயிகள் சிலர் புகார் கொடுத்துள்ளதை உலக வங்கி கருத்தில் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமராவதி திட்டத்திற்காக உலக வங்கி கொள்கையளவில் ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுக்க சம்மதித்ததாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னதாகத் தெரிவித்தார்.